DOB change not allowed after sslc

10-ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்த முடியாது ஐகோர்ட்டு உத்தரவு | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பின்னர், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி.கருணாகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பிறந்த தேதி நான் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி பிறந்தேன். ஆனால், சட்டவிவரங்கள் தெரியாத என் பெற்றோர், 1989-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி பிறந்ததாக பள்ளியில் சேர்க்கும்போது குறிப்பிட்டுவிட்டனர். நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்போது, எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே குறிப்பிட்டுவிட்டேன். அதன்பின்னர் பிளஸ்-2 தேர்விலும் அதேபோல குறிப்பிட்டிருந்தேன். இதன்பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு வானூர் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றில் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி நான் பிறந்ததாக பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவை பெற்றேன். சான்றிதழ்கள் குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வருவாய் துறை அதிகாரியிடம், பிறப்பு சான்றிதழ் பெற்றேன். அதன்பின்னர், நான் படித்த பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, 1992-ம் ஆண்டு பிறந்தேன் என்று புதிய மாற்றுச்சான்றிதழை பெற்றேன். இந்த ஆவணங்களை எல்லாம் வைத்து, என்னுடைய 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றித்தரும்படி தமிழக தேர்வுத்துறை செயலாளரிடம் கடந்த 2014-ம் ஆண்டு மனு செய்தேன். பலமுறை நேரில் சென்று முறையிட்டும், பிறந்த தேதியை திருத்தம் செய்து தராமல் உள்ளார். எனவே, என்னுடைய உண்மையான பிறந்த தேதியை குறிப்பிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும்படி தேர்வுத்துறை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. எஸ்.எஸ்.எல்.சி. விதிகள் இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- எஸ்.எஸ்.எல்.சி. விதிகள், பிரிவு 5-ன்படி, வயது மற்றும் பெயர்களில் ஏதாவது திருத்தம் இருந்தால், அந்த திருத்தத்தை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பே செய்துவிட வேண்டும். தேர்வுக்கு பின்னர், திருத்தங்களை செய்ய முடியாது என்று தெளிவாக கூறுகிறது. எனவே, மனுதாரரின் 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, தேர்வுத்துறை செயலாளருக்கு அதிகாரமே கிடையாது. ஆனால், மனுதாரர் தன் பிறந்த தேதியை பெற்றோர் தவறுதலாக பள்ளியில் கொடுத்துவிட்டனர் என்கிறார். இதற்காக அவர் குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, பிறந்த தேதியை மாற்றவேண்டும் என்ற உத்தரவையும் பெற்றுள்ளார். அதிகாரம் இல்லை இந்த வழக்கில், மனுதாரர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இப்படி ஒரு உத்தரவை குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்துள்ளது. உத்தரவு பிறப்பிதற்கு முன்பு உரிய விசாரணையை மேற்கொள்ளவில்லை. வேறு எந்த ஒரு ஆதார ஆவணங்களையும் பரிசீலிக்கவில்லை. மேலும், பிறந்த தேதியை மாற்றவேண்டும் என்று தேர்வுத் துறை செயலாளருக்கு உத்தரவிட குற்றவியல் கோர்ட்டுக்கு அதிகாரமே கிடையாது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தால், எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும், குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, தன்னுடைய பிறந்த தேதியை மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். தள்ளுபடி எனவே, இந்த வழக்கை ஏற்கமுடியாது. மனுதாரர் தான் 1992-ம் ஆண்டு பிறந்ததற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மேலும், எஸ்.எஸ்.எல்.சி. விதிகளின்படி, 10-ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் பிறந்த தேதியை மாற்ற முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos