அரசுப் பள்ளியில் தலைமையாசிரியர் - கிளர்க் அடிதடி


திருப்புவனம்: திருப்புவனம் அருகே கரிசல்குளம் பள்ளியில் தலைமை ஆசிரியர், கிளர்க் இடையே மோதல் ஏற்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்புவனம் பொட்டப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மலைச்சாமி. எழுத்தராக அழகர்சாமி உள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்க நிதியை செலவழித்தது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன்பும் தகராறு ஏற்பட்டபோது பிற ஆசிரியர்கள் விலக்கினர்.
நேற்று காலை மீண்டும் பள்ளி வளாகத்திலேயே இருவரும் அடித்துக் கொண்டனர். தலைமையாசிரியர் மலைச்சாமி தாக்கியதில் காயமடைந்த எழுத்தர் அழகர்சாமி 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கூறுகையில், "தலைமை ஆசிரியர் தினமும் தாமதமாக வந்து விட்டு வருகை பதிவேட்டில் திருத்தம் செய்வார். பள்ளி நிதியை முறைகேடாக செலவழித்து விட்டு கணக்கு எழுதச் சொன்னார். மறுத்ததால் மாணவர்கள் முன்னிலையில் இரும்புக் கம்பியால் தாக்கினார்" என்றார்.
தலைமையாசிரியர் மலைச்சாமி கூறுகையில், "சம்பவம் குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்" என்றார். முதன்மை கல்வி அலுவலர் செந்தில்முருகன் கூறுகையில், தகராறு குறித்து விசாரித்து வருகிறேன்" என்றார். மாவட்ட கல்வி அலுவலர் நீலவேணியிடம் கேட்டபோது, விசாரித்து விட்டு பதில் கூறுகிறேன்" என்றவர், பின்னர் தொடர்பு கொள்ளவே இல்லை.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos