அரசுப் பள்ளிகளில் ஆலோசனைப் பெட்டி:

 முதற்கட்டமாக 480 பள்ளிகளில் அமல் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீர்க்க பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு கவுன்சிலிங் அளிக்கப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக மாவட்டந்தோறும் 15 பள்ளிகள் வீதம் 480 பள்ளிகளில் கவுன்சிலிங் பாக்ஸ் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பல்வேறு மனநல பிரச்னைகள் கற்றலில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றை தீர்க்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நடமாடும் உளவியல் ஆலோசகர்களும், பள்ளி ஆசிரியர்களும் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை சந்தித்து கவுன்சிலிங் நடத்த உள்ளனர்.
இதற்காக மாவட்ட வாரியாக குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், நிபுணர் குழு மூலம் பயிற்சி அளித்து வருகிறது. மாணவர்களின் பிரச்னையை அறிவது எப்படி, அதை எப்படி தீர்ப்பது என்பது குறித்து பல கட்டமாக சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அடுத்த மாதம் மாவட்டத்திற்கு 15 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் வீதம் 32 மாவட்டங்களிலும் 480 பள்ளிகளில் கவுன்சிலிங் பாக்ஸ் நிறுவப்படும்.
இதுகுறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் டாக்டர். விருத்தகிரிநாதன் கூறியதாவது:
*ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்றதும் நான்கு, ஐந்து வகுப்புகளை இணைத்து மாணவர் மத்தியில் கற்றல் குறைபாடு குறித்து பொதுவான கருத்துகளை கூறி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
*ஒரு மாதம் இடைவெளி விட்டு மீண்டும் ஒரு முறை மாணவர்களை அழைத்து கவுன்சிலிங் குறித்து பேச வேண்டும். அப்போது அன்பான முறையில் அவர்களை அணுகி மாணவர்கள் தங்களுக்குள்ள கற்றல் பிரச்னைகள் குறித்து கவுன்சிலிங் பெட்டியில் எழுதிப்போடலாம். அது மிகவும் ரகசியமானது என தெரிவிக்க வேண்டும்.
*கண்டிப்பாக இரு மாணவர்களாவது தங்கள் பிரச்னையை எழுதிப்போடுவர். அந்த மாணவர்களை அழைத்துப்பேசி பள்ளி முடிந்தபின் முறையாக பயிற்சி அளிக்க வேண்டும்.
இரு மாணவர்களின் பிரச்னைகளை சரிசெய்துவிட்டால், மற்ற மாணவர்களும் சகஜமாக தங்களின் பிரச்னைகளை வெளிப்படுத்த முன்வருவர். இவ்வாறு விருத்தகிரிநாதன் கூறினார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos