schools drawbacks news

செங்குன்றம்: அரசு உயர்நிலை பள்ளிகளில் கணினி இருந்தும், அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிப்படைந்து உள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 300க்கும் அதிகமான அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 150 பள்ளி களில் மட்டும்தான், தகவல் தொடர்பு வசதிக்காக கணினிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன் மூலம், பள்ளி யின் வளர்ச்சி பணி, திட்ட பணி மற்றும் புகார்கள் குறித்து, உயர் அதிகாரிகள் உடனுக்குடன் அறியவும், உத்தரவுகளை தெரிவிக்கவும் முடியும். வருவாய் துறையுடன், பள்ளி கல்வி துறை இணைந்து, பள்ளி மாணவர்களுக்கான ஜாதி, வருவாய் சான்றிதழ்களையும் வழங்க முடியும். அரசு பொது தேர்வுக்கான அறிவிப்பு, அதற்குரிய மாணவ, மாணவியரின் வரிசை எண் பட்டியல் ஆகியவற்றையும் உடனடியாக தெரிவிக்க முடியும். ஆனால், மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், கணினி வசதி செய்யப்படவில்லை. அந்த வசதி உள்ள பள்ளிகளில் கணினி பயிற்சி பெற்ற பணியாளர்கள் தற்போது பணியில் இல்லை. உதாரணமாக, காலை 10:00 மணி அளவில், குறிப்பிட்ட ஒரு பள்ளி யின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, வகுப்பறை, கழிப்பறைகள் எத்தனை என, கல்வி துறை அலுவலகத்தின் மூலம் விவரம் கேட்டு 'மெயில்' அனுப்பப்பட்டால், அதை குறித்த நேரத்தில் பார்த்து, பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்க உரிய பணியாளர் இருப்பதில்லை.

மற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லது கல்வித் துறை அலுவலகத்தினர், யாராவது தொலைபேசி, அலைபேசி மூலம், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவித்த பின்னரே, கணினியை இயக்க, 'தற்காலிக' ஆள் தேடப்படும் நிலை உள்ளது. அதே போன்று கல்வி துறை அலுவலகத்திற்கு உடனடியாக பதில் தெரிவித்து, 'மெயில்' அனுப்பவும் முடிவதில்லை. அதற்கு காரணம் அந்த கணினி தொடர்ந்து செயல்பாடின்றி முடங்கி கிடப்பதுதான். இதனால் பதில் கடிதம் தயாரித்து, 'நெட்' சென்டர்களுக்கு சென்று மெயில் அனுப்புகின்றனர். கிராமப்புற பள்ளிகளில் நிலைமை இன்னும் மோசம். அவர்கள், 'நெட்' சென்டருக்காக, பல கி.மீ., தூரம் பயணித்து நகர்ப்புறங்களுக்கு சென்று வர வேண்டும்.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் அதற்கான அடிப்படை பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை. பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்களே பற்றாக்குறைதான். அதனால், மாணவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவர்களை தேர்ச்சி அடைய செய்யவும் முடியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னை: 'சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும், நான்கு மாதங்களில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனு ஏன்? மணலி, சடையன்குப்பத்தில், மாநகராட்சி நடுநிலை பள்ளியின் கூரை இடிந்து விழுந்ததில், இரு மாணவர்கள் காயமடைந்தனர். கடந்த ஆண்டு, ஜனவரியில், சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், அரசு பிறப்பித்த உத்தரவின்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கட்டட வசதி, கழிப்பறை, குடிநீர், இருக்கை, முதல் உதவி என, அடிப்படை வசதிகளை அளிக்கவும், அதை கண்காணிக்க, நிரந்தர குழுவை அமைக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கார்த்திகேயன் என்பவர், மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, 'முதல் பெஞ்ச்', பள்ளி கல்வி இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் குழுவை அமைத்து, சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படி, உத்தரவிட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளி கல்வி இணை இயக்குனர் ராஜேந்திரன், அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சென்னை மாநகராட்சி நடத்தும், 281 பள்ளிகளில், 68 பள்ளிகள், அரசாணையில் கூறியுள்ள அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றி உள்ளது என்றும் மற்ற பள்ளிகளில் சுட்டி காட்டப்பட்டுள்ள குறைகள், நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஏப்ரலுக்குள்...: சுட்டி காட்டப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என, மாநகராட்சி வழக்கறிஞர் தெரிவித்தார். நான்கு மாதங்களுக்குள், குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய, சென்னை மாநகராட்சி அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அப்போது தான், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும்போது, அனைத்து வசதிகளும், பள்ளிகளுக்கு கிடைத்திருக்கும்.

அறிக்கை அவசியம்: மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, நீதிமன்றம் கண்காணிக்கும். நான்கு மாதங்கள் வரை காத்திருக்காமல், அவ்வப்போது மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளை, நாங்கள் கவனிக்க ஏதுவாக, மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எந்தெந்த பள்ளி களில், எந்த அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை, குறிப்பிட வேண்டும். விசாரணை, மார்ச், 12ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

knowledge links

Videos